Thursday, October 30, 2008

மறுகலவை(ரீமிக்ஸ்) பாடல்கள் - மறுபதிவு(ரீமேக்) படங்களின் தேவை என்ன?

மறுகலவை பாடல்கள், மறுபதிவு படங்கள் தேவைதானா? ஆம் என்கிறது வழக்கம்போல நமது திரைப்பட கும்பல். அனேகமாக "குறும்பு" திரைப்படத்தில் வந்த "ஆசை நூறுவகை" பாடல்தான் இன்றைய மறுகலவை கொலைகளுக்கு பிள்ளையார் சுழி என நினைக்கிறேன்.

மறுகலவை என்றால் என்ன? ஏற்கனவே இசையமைக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் கேட்டு கேட்டு நமது வாழ்வியலோடு கலந்து போன பாடல்களின் (அதிகமாக இளையராஜா பாடல்கள்) மெட்டை எடுத்து நோகாமல் நொங்கு திண்பதுபோல் புதிய பாடல் ஆக்குவது. பழைய ரசனை கெடாமல் இப்பாடல்கள் இருந்தாலாவது கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம், மாறாக நம்மை கொலையல்லவா செய்கிறது.

இசைஞானி தனது பழைய பாடல்களை ( மன்றம் வந்த - மெளன ராகம், விழியிலே - நூறாவது நாள், குழலூதும் கண்ணனுக்கு - மெல்ல திறந்தது கதவு) மெருகேற்றி அதன் இயற்கை தன்மை கெடாமல் அமிதாப் நடித்த "சீனி கம்" என்ற இந்தி படத்தில் பயன்படுத்தி இருந்தார். மேலும் ராம் கோபால் வர்மா-வின் தமிழ் படமான "உதயம் 2008"-ல் "பன்னீர் புஷ்பங்கள்" திரைப்படத்தில் இடம் பெறும் "ஆனந்த ராகம்" பாடலை மெருகேற்றி "என் நெஞ்சின் ராகம்" என்ற பாடலில் பயன்படுத்தி இருந்தார். இங்கே கவனிக்க வேண்டிய செய்தி, இசைஞானியின் அந்த பழைய மெலடி பாடல்கள் நம்மை எந்த அளவிற்கு கட்டிப்போட்டதோ அதை விட ஒரு பங்கு மேலே இந்த பாடல்கள் கட்டிப்போட்டன என்பது அப்பாடல்களை கேட்டு ரசித்தோருக்கு புரியும். இந்த ஆரோக்கியமான மறுகலவை பாடல்களை நாம் கண்டிப்பாக ஒப்பு கொள்ளலாம்.

மற்ற இசையமைப்பாளர்களின் மறுகலவை பாடல்களை கவனியுங்கள், அந்த பழைய பாடலில் இருந்த ரசத்தை துடைத்து குப்பையில் போட்டுவிட்டு, மொத்த குப்பையையும் பாடலில் சேர்த்து மறுகலவை பாடலாக்கிவிடுகிறார்கள். ஆறாம் வகுப்பில் ஆங்கில பாடத்தின் கட்டுரையை மனப்பாடமாக்கி ஒப்புவிக்கும் மாணக்கர்களை போல் இன்றைய ரசிகர்கள் ஆங்கிலப்படுத்தப்படும் இந்த தமிழ் மறுகலவை பாடல்களை பாடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

ஆங்கில தொகுப்பு பாடல்களை(ஆல்பம்) அப்பட்டமாக அடித்து கைத்தட்டல் வாங்கி பார்த்தார்கள் ஒரு காலத்தில், ஆனால் இன்று அந்த இசையமைப்பாளர் ஒரு தொகுப்பு பாடலை கேட்பதற்கு முன் இங்கே ஆயிரம் பேர் கேட்டு விடுவதால், மீசையில் கூழும் ஒட்டாமல், குடித்தும் விட வேன்டும் என்றென்னும் இவ்விசையமைப்பாளர்கள் இந்த இசை கொலைகளில் அரங்கேற்றிவிடுகின்றனர்.

அடுத்ததாக மறுபதிவு படங்கள். . . .ரஜினி நடித்து வெளிவந்த "பில்லா" திரைப்படம், அஜீத்தை வைத்து மறுபதிவு செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற, ஒரு டஜன் ரஜினி திரைப்படங்கள் தற்பொழுது மறுபதிவு செய்யப்பட்டு வருகிறது. ஏன்? இசையமைப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அதே நிலைமாதான் இவர்களுக்கும்! ஆங்கில பட குறுந்தகடுகளை உல்டா செய்து உலகத்தர படங்களை (அவங்க சொல்றத நம்பாதீங்க) எடுத்துவிட்டதாக பூரித்துக் கொள்ளும் இவர்களுக்கு முன்னரே இப்பொழுது ரசிகர்களை உலக சினிமாக்கள் வந்தடைந்துவிடுகிறது.

உட்கார்ந்து யோசித்த கும்பல் இந்தியில் மறுபதிவு செய்து வெற்றி பெறும் வாய்ப்பாட்டை பிடித்து கொண்டது. (அப்பறம் எப்படி தமிழ் சினிமா உருப்படும்?) மக்களின் ரசனையை மழுங்கடித்த அதே ரஜினி வாய்ப்பாட்டு படங்கள் மீண்டும் கோலிவுட்டில். அதாவது ரசிகர்களின் ரசனையை கோவணோத்தோடு ஓடவிட்ட படங்களை மறுபதிவு சென்று ஜட்டியோடு ஓடவிடுகின்றனர்.

மங்கி கிடக்கும் தமிழ் சினிமா ரசனையை மாற்றும் எண்ணம் இவர்களுக்கு துளியும் இல்லை. மாற்று சினிமாவிற்கான வழிகள் ஆயிரம் உள்ளது. பயம்...பயம்... பயம்... இப்படி பயந்து பயந்து தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மழுங்கடித்துவிட்டனர்.

ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒன்றுக்கும் உதவாத அந்த படங்களை மீண்டும் மறுபதிவு செய்பவர்கள் நல்ல திரைப்படங்களின் முடிவுகளை (கிளைமாக்ஸை) ஆரம்பமாக்கி ஏன் ஒரு மாற்று சினிமாவை படைக்க கூடாது? (உதாரணமாக "அழகி" திரைப்பட தனலெட்சுமியின் அடுத்தக்கட்ட வாழ்வியல் எப்படிபட்டதாக அமைந்திருக்கும்? ரே-யின் "சாருலதா"வின் அடுத்தகட்ட வாழ்வியல் எப்படிபட்டதாக அமைந்திருக்கும்?

Monday, October 27, 2008

எனது படைப்பாக்கம் பற்றிய விமர்சனத்திற்கு....


நண்பர்களே!

எனது படைப்பாக்கம் பற்றி எனது ஆருயிர் நண்பன் எழுதிய விமர்சனத்திற்கு இங்கே சொடுக்கவும்

http://thiviyaranchiniyan.blogspot.com/2008/10/2007.html



Wednesday, October 1, 2008

பிரிவின் அர்த்தமும்... மெளன சப்தமும்...

இதய அறையில் உலாவும் வெள்ளி நிலாவிற்கு உனது மூச்சுக் காற்றின் முனகல் சத்தம். பிரிவென்பதின் அர்த்தம் இடமாற்றமல்ல, இதயத்தின் வெளியேற்றம்.


எனது பயணம் இடம் மாறித்தான், இதயத்தை வெளியேற்றியல்ல. பூக்களிலோ பாக்களிலோ ரசம் பிரிந்து மங்கின், பிணம் என்பர். நமக்கும் பொருந்துமது. நம்மின் இவ் இடைவெளி ஒருபோதும் பிரிவு ஆகா.


மணிக்கணக்கில் பேசுவதிதில்லை நேசம். தவறும் அழைப்புகளாகும் நமது கைப்பேசி அழைப்புகளின் இடமாற்றத்தில் ஒளிந்திருப்பது சலனமில்லா மெல் நீரோடையின் சலசலப்பு. அதுவே நம் உறவின் ஓசை.


ஓயாமல் பேசும் நீ ஒருதரம் என் தோள் மீது சாய்வாயே, அப்பரவச சுடர் ஒளிக்கு முன் அந்த சூரியனே தூசு. முகவரி இல்லா ஓராயிரம் கடிதங்களும் பயனற்றவைதான், வார்த்தைகளில்லாமல் வரையப்படும் என் மெளன கடிதங்களுக்கு முன்.


அதீத அன்பின் பரிமாணம் அழுகையை வரவழைக்குமாம். முற்றுப் புள்ளி வைத்துக் கொள்கிறேன் ரத்தத்தில் நனைந்து பிறந்தவனை, முத்தத்தால் வளர்த்தெடுத்தவளின் அழும் சத்தத்தை மரணித்திட செய்ய...