Monday, December 8, 2008

"அவள் பெயர் தமிழரசி"



வித்தியாசமான புகைப்பட விளம்பரங்களின் மூலம் சமீபத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறது 'அவள் பெயர் தமிழரசி' திரைப்படம். அழகான தமிழ் பெயருடன், தலைப்பிலேயே கவிதையான கதை ஒன்றை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் மீராகதிரவன் பாலு மகேந்திரா , தங்கர்பச்சான், லோகித்தாஸ் பட்டறைகளில் வித்தை கற்றவர். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் இது...

“உங்கள் படைப்பு பற்றி...”
"மனதில் அடியாழம் வரை போய் தன் நினைவுகளை மீட்டெடுக்கிற, அதற்குப் பதில் தேடி திரிகிற இளைஞனின் பயணம்தான் 'அவள் பெயர் தமிழரசி'. முழுக்க முழுக்க நாட்டுப்புறக் கலைகளின் கைப்பிடித்துக் கதை சொல்லப் போறோம். 'காதல்', 'வெயில்', 'பருத்தி வீரன்', ‘சுப்பிரமணியபுரம்' வரிசையில் 'தமிழரசி'க்கு ஓர் இடம் கிடைக்கணும்னு இஷ்டப்பட்டு கஷ்டப்படுறோம். கிடைக்கும்!"

"அவள் பெயர் தமிழரசி"ன்னு பெயரே கவிதையா இருக்கே?"
"நன்றி! 'யாரடி நீ மோகினி', சந்திரமுகி'ன்னு பெயர்களைப் பார்த்தால் கதாநாயகியின் சுப்ஜெக்ட் போல தோணூம். ஆனால், இரண்டும் கதாநாயகனின் பார்வையில் நகரும் கதை. இந்தத் தலைமுறை எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. கிராமியக் கூத்தில் நாம் தொலைத்தவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். அதை தேடி எடுக்கிற முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

ஒரு நிமிடம், ஒரு சம்பவம், ஒரு வார்த்தை உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். 'நாம் அதைச் செய்திருக்கக் கூடாதோ'னு குற்ற உணர்வு வாழ்நாள் முழுவதும் குத்திக் குடைந்து கொண்டே இருக்கும். நமது ஒவ்வொரு செயலும் ஒருவருக்கு நன்மையாகவும் இன்னொருவருக்கு தீமையாகவும் முடியும். உண்மையில் இந்த நன்மை, தீமைகளை நாம் திட்டமிடுவது இல்லை. அது இயல்பாக நடக்கிற ஒன்று. கொஞ்ச நாட்கள் கழித்து 'இது நன்மை', ' இது தீமை'ன்னு அசைபோடுகிற காலத்தின்போது சிலர் செய்த தீமைகளுக்குப் பிராயச்சித்தம் தேடுகிறோம். மனிதன் கடவுளாக மாறிய ஒருவனின் காதல் கதை இது. வற்றிப்போன எல்லா நதிகளின் ஆழத்திலும் எங்கோ ஒரு சொட்டு ஈரம் தேங்கி கிடக்குமே... அந்த ஈரத்தின் சுவையை தமிழரசி உணர்த்துவாள்"

"இந்தக் கதைக்கு ஜெய் எப்படிப் பொருத்தமாக இருக்கிறார்?"
" 'சுப்பிரமணியபுரம' படம் பண்ணும்போதே அவரை இந்தக் கதைக்கு உள்ளே கொண்டு வந்திட்டோம். அவரைப் போல வெற்றிப் படம் கொடுத்தவர்கள் உடனடியா ஆக் ஷன் படம் பண்ணக் கிளம்பிருவாங்க. ஆனால், விதிவிலக்கா ஜெய் தேர்ந்தெடுக்கிற எல்லாப் படங்களும் தீவிரமான கதைகளாகவே இருக்கிறது. ப்ளஸ் டு படிக்கிற மணவனாக உடம்பைக் குறைத்ததும், கேரக்டரின் வலியைத் தன் வலி மாதிரி சுமந்து நடித்ததும் சினிமா மீதான ஜெய்யின் அக்கறைக்குச் சாட்சி. அது போதும் என் கதையின் நாயகனுக்கு"

"தமிழரசி"
"என் தமிழரசிக்காகக் கிட்டத்தட்ட 600 பெண்களைச் சந்தித்திருப்பேன். ஒண்ணு, கோதுமை நிற மார்வாடிப் பெண்கள் சிரிக்கிறாங்க. இல்ல, செக்கச்செவேல் கேரளப் பெண்கள் வெட்கப்படுறாங்க. என்ன செய்யிறதுன்னு புரியாம சின்னத் திகைப்பு உண்டான சமயம்தான் நந்தகி கண்ணில் பட்டார். தமிழ்நாட்டின் அசல் கிராமத்தைச் சேர்ந்த பெண். தமிழும் தமிழ் உணர்வுகளும் தமிழரசி கேரக்டருக்குப் பாந்தமாகப் பொருந்தினார். எனக்கு தமிழரசியும் தமிழ் சினிமாவுக்கு நல்ல கதாநாயகியும் கிடைத்துவிட்டார்.

"படத்தில் வேற என்ன விசேஷம்?"
"ஓவியர் வீரசந்தானம், சமூக சிந்தனையாளர் தியோடர் பாஸ்கரன் போன்ற திறமையானவர்களை இதுநாள்வரை தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை என்கிற கோபம் எனக்கு உண்டு. அந்தக் கோபத்தை என் படத்திலேயே தீர்த்துக்கொண்டேன். கோபக்கார கலைஞரான வீரசந்தானத்தின் நடிப்பு கொடி கட்டிப் பறக்கிறது. வீர சந்தானம் ஏற்கனவே சந்தியா ராகத்தில் நடித்திருந்தாலும் சினிமாவை விட்டு நீண்ட காலமாக விலகியே இருந்தவர். இசைக்கு விஜய் ஆண்டனி. ஒரு மாற்று இசைக்குத் தயாராகி, பொறுப்பை உணர்ந்து அழகான இசையை தந்திருக்கிறார். ஒரு நல்ல அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்!"


புது முயற்சிகளுக்கும், தரமான படைப்புகளுக்கும் என்றுமே தமிழில் அங்கீகாரம் உண்டு. மீராவின் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் இப்படத்தின் மூலம் கிடைத்து, மேலும் தரமான பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் உணர்வின் அடிப்படையிலானதா? உரிமைக்கானதா?

ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கை நியாயமானதா? இப்போராட்டம் உணர்வின் அடிப்படையிலான போராட்டமா? அல்லது உரிமைக்கான போராட்டமா? இந்த கேள்விகளுக்கு தெளிவானதொரு வரலாற்று உண்மை புரிதல் அவசியமாகிறது.

பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்ட பாரதம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இன்றைய இந்தியாவாக எவ்வாறு ஒரே நாடாக்கப்பட்டதோ, அதேபோல் இன்றைய இலங்கையில் தனி கலாச்சார அடையாளங்களுடன், தனி தனி மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் பகுதியும், சிங்களப் பகுதியும் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்ட பிறகே ஒன்றாக்கப்பட்டு லங்கை தீவு என்றழைக்கப்பட்டது. (இலங்கையின் பூர்விக குடிமக்கள் தமிழர்கள் மட்டுமே என்றும், சிங்களவர்கள் அதன் பின்னரே குடியேறியவர்கள் என்றும் வரலாறு கூறுகிறது)

கி.பி.1505 முதல் கி.பி1656-வரை போர்த்துகேயராலும், கி.பி1656 முதல் கி.பி.1796 வரை ஒல்லாந்தராலும் ஆளப்பட்ட இத்தீவை, பிரித்தானியர்கள் கி.பி.1796-ல் கைப்பற்றினர். இங்கு அடுத்த சிக்கல் ஆரம்பமானது. கி.பி.1820-ல் சீனாப்பட்டி என்ற ஊரில் கோப்பி பயிர் செய்யும் முயற்சியில் வெற்றி கண்டு, அதன்மூலம் அதிக லாபம் ஈட்டியவர்கள், இன்னும் அதிக அளவில் கோப்பி பயிர் செய்ய விரும்பினர். இத்தொழிலில் அங்கு வாழ்ந்த சிங்களவர்கள் ஈடுபட மறுத்ததனால், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவர திட்டமிட்ட பிரித்தானியர்கள், இன்றைய தமிழகத்து தமிழர்களிடம் ஆசைகாட்டி ஆயிரக்கணக்கில் ஆண்களையும் பெண்களையும் அழைத்து சென்று, மலையக பகுதியில் அடிமைகளாக்கினர்.

நிலப்பிரப்புகளின் கொடுமைகளில் தாங்கவியலாத வேதனையை அனுபவித்தும், சமுதாய ஒழுங்கு முறைகளால் அந்நியப்படுத்தப்பட்ட நிலையிலும், தீண்டாமைக் கொடுமையினாலும் பாதிக்கப்பட்ட தலித்துக்களும், குடும்ப பாரம்பரிய வக்கிரத்தனத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களே பெரும்பாலும் அவர்களின் ஆசைவார்த்தைகளில் மயங்கி அங்கே அடிமையாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கி.பி.1823-ல் தொடங்கி கி.பி.1939 ஆண்டு வரை தொடர்ந்தது எனலாம்.

கி.பி.1948 பிப்ரவரி நான்காம் திகதி பெருமபான்மை இனமான சிங்களவர்களிடம் பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்க, அரியணையில் ஏறிய சிங்கள அரசு 15.11.1948-ல் இம்மலையக தமிழர்களின் (தமிழகத்திலிருந்து குடியேறிவர்களின்) குடியுரிமையை பறித்து அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியது. பிரித்தானியர்களின் அடிமை விலங்கிலிருந்து விடுபட்டவர்களை இக்குடியுரிமை பறிப்பு சட்டம் ஓட ஓட விரட்டியது.

அதன் பின்னர் 5.6.1956-ல் தனி சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட, அத்தீவின் பூர்வீக குடிகளான இலங்கைவாழ் தமிழர்களை உலுக்கியது. பாத யாத்திரை, கறுப்புக்கொடி போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என தொடர்ந்த அறப்போராட்டங்களில் முன்னணி அரசியல் தலைவர்கள், பொது மக்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்த தமிழினம் ஒன்றுபட 30.3.1958-ல் மொழி உரிமை போரில் அய்யாவு, பிரான்ஸிஸ் என்ற இரு தமிழர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது.

பண்டா ஸெல்வா உடன்படிக்கை(26.07.1957), சிறிமாஸாஸ்திரி ஒப்பந்தம்(30.10.1964), டட்லி- செல்வா உடன்படிக்கை(24.03.1965), கி.பி.1970-ல் நிறைவேற்றப்பட்ட தரப்படுத்துதல் கொள்கை, புதிய குடியரசு அரசியல் சட்டம்(22.05.1972) என ஒவ்வொன்றும் தமிழர்களின் அகிம்சையை தோற்கடிக்க, தமிழர் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர்.

வெறிகொண்ட இலங்கை அரசு, அவ்விளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக சிறைப்படுத்தி சித்ரவதை செய்ய ஆரம்பித்து கொல்ல. காடுகளில் அவ்விளைஞர்கள் தஞ்சம் புகுந்து போராட ஆரம்பித்தனர்.

காட்டில் இருந்து போடாடிய குழுக்களை நெருங்க முடியாத இலங்கை அரசு தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கென அப்பாவி தமிழ் மக்களை அழிக்கத் தொடங்கியது. ஷெல்லடி, கற்பழிப்பு, கட்டாய சிங்கள குடியேற்றம் என தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க திட்டமிட்டு செயல் படுத்தியது.. தமிழ் மக்கள் தங்களை காத்துக் கொள்ள அண்டை நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்தனர்.

அடிக்க அடிக்க போராளி குழுக்கள் வலிமை அடைந்தது. தமிழீழ விடுதலை புலிகள்(LTTE), தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), ஈழ புரட்சி அமைப்பு(EROS), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF) என பல குழுக்களாக போராடிய குழுக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கலைக்கப் பார்த்த இலங்கை அரசுக்கு, சூழ்ச்சியை வென்ற தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இன்றும் இலங்கையையும், அதற்கு ஆதரவாக செயல்படும் நாடுகளின் தொழில்நுட்பங்களையும் ஆட்டம் காண வைக்கிறது.

ஆக உரிமைக்கான போராட்டமாகவே உருபெற்ற இப்போராட்டம், இன்றும் உரிமைக்கான போராட்டமாகவே தொடர்கிறதே என்பதே நிசப்தம். இதனை தமிழீழ போராட்டதை ஊர்ந்து கவனிக்கும் யாவரும் நன்கு அறிவர்.

இன்று யாழ்பாணம், வன்னி, மட்டக்களப்பு இணைந்த வட கிழக்கு மாகாணங்களை இணைத்துதான் தனி தமிழீழம் அமைக்க முப்படை கொண்ட முதல் போராளி இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் போரடி வருகின்றனர். இந்நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள், யாழ்பாணம், மன்னார் ,அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் தமிழீழ விடுதலை புலிகள் வசமுள்ளது.

கல்வி, மருத்துவம், காவல், நீதி என முக்கிய நிர்வாகங்களின் மூலம் ஒரு அரசாங்கமே இங்கு நடக்கிறது. 6 அடுக்கு நீதிமன்றங்கள், 16 ஆண்டுகளாக சட்ட கல்லூரி, பள்ளிகளிலும் மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளிலும் தமிழ் வழியில் கல்வி, வேளாண்மை பண்ணைகள் மூலம் விவசாயம், தமிழீழ வைப்பகம்(வங்கி), ஆதரவற்றோர் வாழ செஞ்சோலை என நிர்வாகம் சிறப்பாக திட்டமிட்டு செயல்பட, வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தினால் தண்டணை, சாதி விடு சாதி கல்யாணம் செய்வதை எதிர்த்தால் தண்டனை என நீதி செம்மையாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

“இந்தியா வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்றபோதும், அர்த்த ராத்திரியில் எந்த பயமும் இன்றி ஒரு பெண்ணால் எப்போது சுதந்திரமாக நடமாட இயல்கிறதோ அன்றுதான் உண்மையிலேயே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக பொருள்” என்பது நம் தேசபிதா காந்தியின் தத்துவம். உலகில் வல்லரசாக உருமாறி வரும் இந்தியாவால் கூட இன்றுவரை சாதிக்க இயலாத இச்சாதனையை தமிழீழம் படைத்துக்கொண்டிருக்கிறது. தமிழீழ வீதிகளில் திருட்டு பயமில்லை, பிச்சைகாரனின் தொந்தரவில்லை. நடு ரத்திரியில் ஆட்கள் நடமாட்டமில்லா தெருக்களில் ஒரு பெண்ணால் நடமாட முடிகிறது. கட்டுக்கோப்பான நிர்வாகத்திற்கு இது சான்று.

ஆக ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் தமிழீழ விடுதலை புலிகளால் முன்னெடுத்து செல்லப்பட்டு தனி அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில், இவ்வரசாங்கத்தை உலகத்தால் அங்கீகரிக்கப்பட வைக்கவும், எஞ்சிய தமிழர் பகுதிகளை மீட்கவுமே தமிழீழ விடுதலை புலிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழீழத்தை அங்கீகரிக்க சொல்லி முதல் குரலாக விடுதலை சிறுத்தைகள் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது.

Monday, December 1, 2008

"வெயிலோடு போய்", "பூ"வாக மலர்ந்திருக்கிறது!



தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை தேர்வுசெய்து வெற்றி பெற்றவர்களில் மிகவும் குறுப்பிடத்தக்கவர் தோழர் ச.தமிழ்செல்வன். அவரின் படைப்புகளில் "வெயிலோடு போய்"சிறுகதை உணர்வு ரீதியான முக்கியப் படைப்பு. தமிழ் சினிமா இதுபோல் தரமான பதிவுகளை அத்தி பூத்தாற்போல் எப்போதாவது எட்டிப்பார்க்கும். இயக்குநர் சசி உருவாக்கத்தில் "ம்"என பெயரிடப்பட்டு தற்போது "பூ"என பெயர் மாற்றத்தோடு "வெயிலோடு போய்" சிறுகதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளது.

ச.தமிழ்செல்வனின் சிறுகதை உணர்விலிருந்து சிறிதும் பிசகாமல், அச்சிறுகதையின் தாக்கத்தை படம் நெடுக வழியவிட்டு கண்களில் நீர் கசிய வைக்கிறது இத்திரைப்படம். நீண்ட......இடைவெளிக்கு பிறகு பெண் கதாப்பாத்திரத்தை மையைப்படுத்தி ஒரு தமிழ் சினிமா. தமிழ் சினிமாவுக்கு ஏற்கனவே பரீட்சயமான சிறிகாந்த், மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகியுள்ள பார்வதி, தோழி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் "ஒன்பது ரூபாய் நேட்டு" புகழ் இன்பநிலா இவர்களை தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் (வாழ்ந்திருக்கும்) அனைவரும் புதுமுகங்கள் என்றபோதும், எந்த ஒரு சிறு கதாப்பாத்திரமும் அதன் உணர்விலிருந்து இம்மியும் விலகாமல் கையாளப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது.

பார்வதி தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் இன்னொரு மலையாள சேச்சி என்றபோதும், அச்சு அசல் அந்த மாரி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தங்கராசுவை மறந்திடு என்றபோது தனது உயிர் தோழியை கல்விட்டு அடிப்பது, பின்பு மனம் மாறி அவளை சமாதனம் செய்வது, துணிமாற்றுகையில் தன்னை பார்த்துவிட்டான் என தெரிந்தபோது அந்த கண்ணாடிகாரனை அடித்து துவம்சம் செய்வது, “கண்ணாடி போடாவிட்டால் கண் சரியாக தெரியாது, நான் உன்னை பார்க்கையில் கண்ணாடி போடவில்லை” என அவன் கெஞ்சியதும் வாய்விட்டு சிரிப்பது, தன்னை திருமணம் செய்துக்கொள்ளாத மாமன் மகன் தங்கராசு திருமணத்திற்கு போகவேண்டும் என அடம் பிடிப்பது, நீ வேரொருவனை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தால் போகலாம் என அண்ணன் கட்டைளையிட உடன் சரி என ஒப்பு கொள்வது, மாமன் மகனின் சந்தோஷத்திற்காக தன்காதலை விட்டுக்கொடுத்தவள் அவன் வாழ்க்கை சரியாக அமையவில்லை என தெரிந்தபோது உடைந்து அழுவது என நடிப்பில் பல பரிமாணங்களை காட்டியிருக்கிறார்.

கதையில் அடுத்த முக்கியமான கதாபத்திரம் சிறிகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும், பிரளயனின் "சென்னை நாடக"குழுவைச் சேர்ந்த ராமு-வின் கதாப்பாத்திரம். தான் கண்ட கனவு பலிக்காமல் போய்விடுமோ என்கிற இடத்தில் ராமு உடைந்துபோவதும், கிளைமாக்ஸில் மாரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் இடங்கள்.

சிறுகதையின் இறுதி காட்சியை சிதைக்காமல் அப்படியே பயன்படுக்தி இருப்பது வித்தியாசமான உணர்வை வெளிக்காட்டியிருக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் "சூ சூ மாரி" , "பாசமொழி பேசும்", "ஆவாரம் பூ" பாடல்களில் மிளிர்கிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அப்பட்டமான கிராமிய சூழலையும், கால மாற்றங்களையும் கண்முன் நிறுத்தியிருக்கிறது. மேலும் கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் என மொத்த குழுவின் உழைப்பும் படம் முழுக்க தெரிகிறது. மொத்தத்தில் "பூ" இயக்குநர் சசிக்கு ஒரு முக்கியமான பதிவு, தமிழ் சினிமாவில் ஒரு தரமான பதிவு.