Monday, December 8, 2008

ஈழத்தமிழர்களின் போராட்டம் உணர்வின் அடிப்படையிலானதா? உரிமைக்கானதா?

ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கை நியாயமானதா? இப்போராட்டம் உணர்வின் அடிப்படையிலான போராட்டமா? அல்லது உரிமைக்கான போராட்டமா? இந்த கேள்விகளுக்கு தெளிவானதொரு வரலாற்று உண்மை புரிதல் அவசியமாகிறது.

பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்ட பாரதம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இன்றைய இந்தியாவாக எவ்வாறு ஒரே நாடாக்கப்பட்டதோ, அதேபோல் இன்றைய இலங்கையில் தனி கலாச்சார அடையாளங்களுடன், தனி தனி மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் பகுதியும், சிங்களப் பகுதியும் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்ட பிறகே ஒன்றாக்கப்பட்டு லங்கை தீவு என்றழைக்கப்பட்டது. (இலங்கையின் பூர்விக குடிமக்கள் தமிழர்கள் மட்டுமே என்றும், சிங்களவர்கள் அதன் பின்னரே குடியேறியவர்கள் என்றும் வரலாறு கூறுகிறது)

கி.பி.1505 முதல் கி.பி1656-வரை போர்த்துகேயராலும், கி.பி1656 முதல் கி.பி.1796 வரை ஒல்லாந்தராலும் ஆளப்பட்ட இத்தீவை, பிரித்தானியர்கள் கி.பி.1796-ல் கைப்பற்றினர். இங்கு அடுத்த சிக்கல் ஆரம்பமானது. கி.பி.1820-ல் சீனாப்பட்டி என்ற ஊரில் கோப்பி பயிர் செய்யும் முயற்சியில் வெற்றி கண்டு, அதன்மூலம் அதிக லாபம் ஈட்டியவர்கள், இன்னும் அதிக அளவில் கோப்பி பயிர் செய்ய விரும்பினர். இத்தொழிலில் அங்கு வாழ்ந்த சிங்களவர்கள் ஈடுபட மறுத்ததனால், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவர திட்டமிட்ட பிரித்தானியர்கள், இன்றைய தமிழகத்து தமிழர்களிடம் ஆசைகாட்டி ஆயிரக்கணக்கில் ஆண்களையும் பெண்களையும் அழைத்து சென்று, மலையக பகுதியில் அடிமைகளாக்கினர்.

நிலப்பிரப்புகளின் கொடுமைகளில் தாங்கவியலாத வேதனையை அனுபவித்தும், சமுதாய ஒழுங்கு முறைகளால் அந்நியப்படுத்தப்பட்ட நிலையிலும், தீண்டாமைக் கொடுமையினாலும் பாதிக்கப்பட்ட தலித்துக்களும், குடும்ப பாரம்பரிய வக்கிரத்தனத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களே பெரும்பாலும் அவர்களின் ஆசைவார்த்தைகளில் மயங்கி அங்கே அடிமையாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கி.பி.1823-ல் தொடங்கி கி.பி.1939 ஆண்டு வரை தொடர்ந்தது எனலாம்.

கி.பி.1948 பிப்ரவரி நான்காம் திகதி பெருமபான்மை இனமான சிங்களவர்களிடம் பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்க, அரியணையில் ஏறிய சிங்கள அரசு 15.11.1948-ல் இம்மலையக தமிழர்களின் (தமிழகத்திலிருந்து குடியேறிவர்களின்) குடியுரிமையை பறித்து அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியது. பிரித்தானியர்களின் அடிமை விலங்கிலிருந்து விடுபட்டவர்களை இக்குடியுரிமை பறிப்பு சட்டம் ஓட ஓட விரட்டியது.

அதன் பின்னர் 5.6.1956-ல் தனி சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட, அத்தீவின் பூர்வீக குடிகளான இலங்கைவாழ் தமிழர்களை உலுக்கியது. பாத யாத்திரை, கறுப்புக்கொடி போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என தொடர்ந்த அறப்போராட்டங்களில் முன்னணி அரசியல் தலைவர்கள், பொது மக்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்த தமிழினம் ஒன்றுபட 30.3.1958-ல் மொழி உரிமை போரில் அய்யாவு, பிரான்ஸிஸ் என்ற இரு தமிழர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது.

பண்டா ஸெல்வா உடன்படிக்கை(26.07.1957), சிறிமாஸாஸ்திரி ஒப்பந்தம்(30.10.1964), டட்லி- செல்வா உடன்படிக்கை(24.03.1965), கி.பி.1970-ல் நிறைவேற்றப்பட்ட தரப்படுத்துதல் கொள்கை, புதிய குடியரசு அரசியல் சட்டம்(22.05.1972) என ஒவ்வொன்றும் தமிழர்களின் அகிம்சையை தோற்கடிக்க, தமிழர் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர்.

வெறிகொண்ட இலங்கை அரசு, அவ்விளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக சிறைப்படுத்தி சித்ரவதை செய்ய ஆரம்பித்து கொல்ல. காடுகளில் அவ்விளைஞர்கள் தஞ்சம் புகுந்து போராட ஆரம்பித்தனர்.

காட்டில் இருந்து போடாடிய குழுக்களை நெருங்க முடியாத இலங்கை அரசு தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கென அப்பாவி தமிழ் மக்களை அழிக்கத் தொடங்கியது. ஷெல்லடி, கற்பழிப்பு, கட்டாய சிங்கள குடியேற்றம் என தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க திட்டமிட்டு செயல் படுத்தியது.. தமிழ் மக்கள் தங்களை காத்துக் கொள்ள அண்டை நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்தனர்.

அடிக்க அடிக்க போராளி குழுக்கள் வலிமை அடைந்தது. தமிழீழ விடுதலை புலிகள்(LTTE), தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), ஈழ புரட்சி அமைப்பு(EROS), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF) என பல குழுக்களாக போராடிய குழுக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கலைக்கப் பார்த்த இலங்கை அரசுக்கு, சூழ்ச்சியை வென்ற தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இன்றும் இலங்கையையும், அதற்கு ஆதரவாக செயல்படும் நாடுகளின் தொழில்நுட்பங்களையும் ஆட்டம் காண வைக்கிறது.

ஆக உரிமைக்கான போராட்டமாகவே உருபெற்ற இப்போராட்டம், இன்றும் உரிமைக்கான போராட்டமாகவே தொடர்கிறதே என்பதே நிசப்தம். இதனை தமிழீழ போராட்டதை ஊர்ந்து கவனிக்கும் யாவரும் நன்கு அறிவர்.

இன்று யாழ்பாணம், வன்னி, மட்டக்களப்பு இணைந்த வட கிழக்கு மாகாணங்களை இணைத்துதான் தனி தமிழீழம் அமைக்க முப்படை கொண்ட முதல் போராளி இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் போரடி வருகின்றனர். இந்நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள், யாழ்பாணம், மன்னார் ,அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் தமிழீழ விடுதலை புலிகள் வசமுள்ளது.

கல்வி, மருத்துவம், காவல், நீதி என முக்கிய நிர்வாகங்களின் மூலம் ஒரு அரசாங்கமே இங்கு நடக்கிறது. 6 அடுக்கு நீதிமன்றங்கள், 16 ஆண்டுகளாக சட்ட கல்லூரி, பள்ளிகளிலும் மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளிலும் தமிழ் வழியில் கல்வி, வேளாண்மை பண்ணைகள் மூலம் விவசாயம், தமிழீழ வைப்பகம்(வங்கி), ஆதரவற்றோர் வாழ செஞ்சோலை என நிர்வாகம் சிறப்பாக திட்டமிட்டு செயல்பட, வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தினால் தண்டணை, சாதி விடு சாதி கல்யாணம் செய்வதை எதிர்த்தால் தண்டனை என நீதி செம்மையாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

“இந்தியா வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்றபோதும், அர்த்த ராத்திரியில் எந்த பயமும் இன்றி ஒரு பெண்ணால் எப்போது சுதந்திரமாக நடமாட இயல்கிறதோ அன்றுதான் உண்மையிலேயே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக பொருள்” என்பது நம் தேசபிதா காந்தியின் தத்துவம். உலகில் வல்லரசாக உருமாறி வரும் இந்தியாவால் கூட இன்றுவரை சாதிக்க இயலாத இச்சாதனையை தமிழீழம் படைத்துக்கொண்டிருக்கிறது. தமிழீழ வீதிகளில் திருட்டு பயமில்லை, பிச்சைகாரனின் தொந்தரவில்லை. நடு ரத்திரியில் ஆட்கள் நடமாட்டமில்லா தெருக்களில் ஒரு பெண்ணால் நடமாட முடிகிறது. கட்டுக்கோப்பான நிர்வாகத்திற்கு இது சான்று.

ஆக ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் தமிழீழ விடுதலை புலிகளால் முன்னெடுத்து செல்லப்பட்டு தனி அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில், இவ்வரசாங்கத்தை உலகத்தால் அங்கீகரிக்கப்பட வைக்கவும், எஞ்சிய தமிழர் பகுதிகளை மீட்கவுமே தமிழீழ விடுதலை புலிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழீழத்தை அங்கீகரிக்க சொல்லி முதல் குரலாக விடுதலை சிறுத்தைகள் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது.

2 comments:

kesavaraj said...

Dear saha...
Its very nice..thank u very much...i known lots of today from ur blog..

Filmmaker Bharathi said...

நன்றி தோழரே