Monday, February 9, 2009

"நான் கடவுள்"- ரெளத்ர தாண்டவம்.

"நான் கடவுள்" பாலா+இளையராஜா +ஆர்யா கூட்டணி ஆடியிருக்கும் ரெளத்ர தாண்டவம். "சேது" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தை வேறு பாதைக்கு இழுத்து சென்றவர் இயக்குநர் பாலா. இந்திய திரையுலகமே வியக்கும் இயக்குநர் மணிரத்னம், அவர் வியந்த தமிழ் இயக்குநர் பாலா. இன்றைய தமிழ் சினிமாவில் புது முயற்சிகள் செய்ய துணியும் இயக்குநர்களிடம் கண்டிப்பாக பாலாவின் பிரதிபலிப்பை காணலாம். இப்பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான பாலா மூன்று வருடகாலமாக உழைத்து செதுக்கியதே இந்த "நான் கடவுள்". தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்காத பக்கங்களை, தன் படைப்புகளில் கொண்டுவருவதே பாலாவின் திறமை. நமக்கு புலப்படாத நம் கண்ணுகெட்டின தூரத்தில் வாழும் பிச்சைக்காரர்களின் வாழ்வியலையும், நம்மில் பலர் பார்த்திராத புனித காசியின் சூழலையும் பிணைத்து நம்மை உறைய வைக்கிறது இந்த "நான் கடவுள்" படைப்பு.

ஜோதிடக்காரனின் பேச்சைக்கேட்டு பதினாலு வருடம் தனது மகனை பக்கத்தில் வைக்கக்கூடாது என்பதற்காக காசியில் கொண்டுபோய்விட்ட தந்தை, பதினாலு வருடம் கழித்து அவனை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வருகிறார். வீட்டினரோடு ஒட்டாமல் நான் கடவுள் என்று திரிகிற அவன், வாழ தகுதியற்றவர்களுக்கு கொடுக்கும் தண்டனையும், வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கும் வரமுமே படம்.

அஜீத், மீரா ஜாஸ்மின், பாவனா, கார்த்திகா என பலர் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விலக்கப்பட்டனர். கடைசியில் ஆர்யா, பூஜாவிற்கு கிடைத்தது இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு. இனி இவர்கள் வாழ்நாளில் இவர்கள் மறக்கமுடியாத வாய்ப்பு.

ஆர்யா, பூஜா, ஆர்யாவின் தாய் உள்ளிட்ட ஒரு சிலரே ஏற்கனவே நமக்கு அறிமுகமான நடிகர்கள், மற்றவர்கள் யாவரும் புதுமுகங்கள். குறிப்பாக தமிழ் திரையுலகம் எப்போதும் கேலிக்கூத்தாக சித்தரிக்கும் திருநங்கை கதாப்பாத்திரத்தில் நிஜ திருநங்கை.

வளர்ந்த தலைமுடி, முகம் நிறைய தாடி, கஞ்சா, கண்களில் மிரட்டும் பார்வை என ஆர்யாவை கண்டதும் படத்தில் வருகிற கதாபாத்திரங்கள் மட்டுமல்ல நாமும் பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் அறிமுக காட்சியில் தலைகீழாக நிற்கும்போதும், கஞ்சா அடிக்கையிலும், மற்றோரை மிரட்டுகையிலும் ரொம்பவே மிரட்டி இருக்கிறார். அதிகம் வசனம் இல்லாத இந்த கதாபாத்திரத்தை இனி கண்டிப்பாக ஊர் பேசும். மூன்றுவருடம் காத்திருந்ததற்கு நல்ல பலன் என்பது படம் முடிகையில் தெரிகிறது.

அடுத்ததாக பூஜா, இனி ஒரு கதாப்பாத்திரம் இப்படி இவருக்கு திரையுலகில் அமைவது மிக மிக கடினம். நிஜ ஊனமுற்றோர்களுக்கு மத்தியில் இவரும் இரண்டர கலந்திருப்பதே இவரின் கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி. அதுவும் கடைசி காட்சியில் அவரை நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் பாலா.

இந்தப் படத்தில் அடுத்ததாக குறிப்பிட வேண்டியது பிச்சை எடுக்க வைக்கப்படும் அந்த ஊனமுற்றவர்களின் கதாப்பாத்திர படைப்புகள் மற்றும் நடிகர்கள். விதவிதமான வேடங்களில் நம்மை தொந்தரவு செய்து பிச்சை எடுப்பர்களின் சூழல் நம்மை உறைய வைக்கும் அளவிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக இளையராஜாவின் பிண்ணனி இசை, மிரட்டுகிறபாணியில் ஆர்யா நடந்து வருகையிலும், உடுக்கையோடு ஆர்யா செய்யும் அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் ராஜா பிண்ணி எடுத்திருக்கிறார். ஒலிநாடாக்களில் கேட்ட "மாதா உன் கோவிலில்" பாடல் படத்தில் பயன்படுத்தபடவில்லை என்றபோதும், "ஓம் சிவ ஓம்" பாடலும், அதை பதிவு செய்த விதமும் அருமை.

ஆர்தர் வில்சனின் கேமரா காசியை படம்பிடித்தவிதம், ஆர்யாவின் அறிமுக காட்சி, கடைசி சண்டைக் காட்சி என நீட்டிக்கொண்டே போகலாம் இவர் நிருபித்த இடங்களை. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் கலையும் ரொம்பவே கை கொடுத்துள்ளது. முக்கியமாக அந்த பிச்சை எடுப்பவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த இடம்.

வெகுஜன சினிமாக ரசிகர்களை இது இழுக்குமா என்பதற்கு விடைதெரியாவிட்டாலும், கலை ரசிகர்களுக்கு நல்ல ரசனையான படைப்பு. தமிழ் சினிமா மார்த்தட்டிக்கொள்ள வேண்டிய முக்கியமான படைப்பு.

2 comments:

Unknown said...

உங்களது விமர்சனம் அருமை நண்பரே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதுதான் இருபினும் அதை பற்றி சொல்லியே ஆகவேண்டும் நாம் பெருபாலும் நினைத்து கூட பார்த்திடாத பிச்சைகாரர்களின் வாழ்க்கை அவர்கள் அனுபவிக்கும் கொடுமை உடல் ஊனமுற்ற அந்த மனிதர்கள் அனைத்தும் அருமை அண்ணன் பாலாவின் படைப்புகளில் இந்த படத்தில் சற்று நகைச்சுவை தூக்கல் அதுவும் நகைசுவை நடிகர்கள் யாரும் இல்லமல் நகைச்சுவை கதையோடு ஒன்றிணைக்க பட்டிருப்பது அருமை நம் கண்டிடாத காசியின் மறுபக்கம் பிரமிபூட்டுகிறது.
ஆர்யா,பூஜா படம் பார்த்து முடித்த பின்னரும் மனதில் நிற்கும் கதா பாத்திரம் இந்த இருவரும் தான்.மொத்தத்தில் இந்த படம் தமிழ் சினிமாவின் இன்னும் ஓர் மயில்கல்.அண்ணன் பாலாவை வாழ்த்துவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லாமல் வருத்தத்துடன் க.வா.சரவணன்

திவியரஞ்சினியன் said...

பல்கலைக்கழகக் கல்வித் தொந்தரவினால் எழுத்துகளுக்கு ஏற்படும் இடைஞ்cஅலைவிட என் நண்பர்களின் எழுத்தை இரசிக்க பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது பாரதி. வாசிப்புப் பழக்கம் எழுத்துப் பழக்கத்தை செம்மையாக்கும் என்பர். எனக்கு இந்த பல்கலைக்கழக இடைஞ்சல் பெரும் சினத்தை ஊட்டினாலும் பல்லைக் கடித்துக் கொண்டு, கல்விமீது பற்றை செலுத்துகிறேன். விரைவில் கல்வி சிறப்பாக முடிந்துவிட்டால், என் எழுத்துப் பணிக்கும் தமிழ் கற்கும் ஆவலுக்கும் வரமாய் இருக்கும் காலம் என நம்புகிறேன்.

நானும் நான் கடவுள் படம் பார்த்தேன். இணையத்தில் தர இறக்கம் செய்யப்பட்டதுதான். படத்தை படைத்த கடவுள்கள் கேள்விப்பட்டால் வேதனையடைவர். என்ன செய்ய...பெலரஸ் இல் தமிழ்படங்களுக்கு என படமாளிகைகள்(தியட்டர்) இல்லை. தமிழ்ப் பட இறுவட்டுக்களை விற்பனை செய்யும் முகவர்களும் இல்லை. இது விரல்விட்டு எண்ணக்கூடிய ஏறத்தாழ மாணவ சமூதாயத்தை சார்ந்த தமிழர்கள் வாழும் நாடாயிற்றே!

இணையத் தரவிறக்கம்தான் ஒரே ஒரு வழி தமிழ்ப்படம் பார்ப்பதற்கு.

படம் தெளிவில்லாத பிரதியாய் இருந்ததால் நீங்கள் சுட்டிக்காட்டிய அருமைகளை உணரமுடியவில்லை. ஏன் இப்படி தெளிவில்லாத பிரதியைப் பயன்படுத்தி பார்த்தேன் என என்னை நானே நோந்துகொண்டேன். ஆனால் அருமையாய் இருக்கும் அழகான பிரதியில் அல்லது படமாளிகையில் பார்த்தால் எனப் புரிந்துகொண்டேன். பாலாவின் படமாயிற்றே. அந்த நம்பிக்கை. இளையராஜா இசைக்கு ராசா என்பதை நான் சொல்லத் தேவையில்லை. நல்ல தமிழுலகு அறிந்த ஒன்று. ஆனால் அவரது இசையை அந்த தெளிவற்ற பிரதியில் எப்படிப் பருக முடியும் சொல்லுங்கள்?

பிச்சைக்காரர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை படத்தில் காட்டிய பாலா அவர்கள் எங்களையும் அப்பிச்சைகாரர்களின் வாழ்க்கையில் இணைய வைத்து வலியை உணர வைத்துள்ளார் என்பதை படத்தில் அவர்களின் காட்சிகள் வரும்போது என் நெஞ்சுக்குள் ஏற்பட்ட வலி உணர்த்தியது.

ஈழ நாட்டில் தமிழர் படும் துன்பமும் பெரிய இயக்குனர்களால் ஒழுங்காக உள்ளது உள்ளபடி இப்படிப்படமாக்கப்பட்டால்??????????????????????????????
கேள்விகளுக்கு விடை என்று கிட்டும் என தெரியாததால் கேள்விக்குறிகள் தொடர்கின்றன.