Monday, August 9, 2010

தர்க்கம் (சிறுகதை) - பாரதி

கார்த்திக மாசத்து ராத்திரி பத்து மணி.. நா இப்போ டவுனுக்குள்ள இருக்குற நாடியம்மன் தேரடிக் கொட்டகைக்குள்ள ஒதுங்கி நிக்கிறேன். எப்பயாவது இந்த முக்கூடுல எரியிற தெருவெளக்கும் இன்னைக்கு கொட்டுற பேய் மழையில அணைஞ்சு கெடக்கு. கின்னு இருட்டு கிட்ட தெரியல..

விடிஞ்சா திங்க கெழம. அது அதுக வெள்ளனமா கெளம்பி சோலிக்கி போவணுமேன்னு வீட்டுக்குள்ள அடஞ்சு போயிருக்கிறதால, நடமாட்டம் இல்ல.. தவள பண்ணயலோட கச்சேரி வேற கொட்டி மொலங்குது. உசுரக்குடுத்து கத்தினாலும் ஒத்த தப்படிக்கு அங்கிட்டுக்கூட நாம கத்துறது கேக்காது போல.

நா இந்த சமயத்துல இங்க ஒதுங்கி இருக்குறது மழக்காவண்டியில்ல. மேல வீட்டு மாரியாயி சொல்லுற கதயில வர்றாபுல கண்ணுல ரவுத்துரத்த கக்கிகிட்டு கையில கத்தியோட நிக்குறேன்.

இருட்டு, மழ, தவள சத்தம், சூலாயுதத்தோட நாக்க காட்டிகிட்டு நிக்குற நாடியம்மன்... இதவிட வேற நல்ல சந்தர்ப்பம் எங்க மாட்டும் எனக்கு? இந்த பூசைக்கு, இதான் ஏத்த எடம்.

ஆமா... இன்னம் சத்த நாழியில இங்குண வந்து ரெண்டு ஜென்மம் சோடியா வந்து கொஞ்சிட்டு பிரிஞ்சு போவும். அதுங்கள சோமய்யா கடை ரொட்டி துண்டாட்டம் வெட்டி இந்த நாடியம்மனுக்கு காவு குடுக்கத்தான் நா நிக்குறேன்..

அன்னபூர்ணா தியேட்டருல ராக்காச்சி முடிச்சி, மணிகூண்டு முக்கூட்டுல இருக்குற கலப்பு கடையில திண்ணுட்டு, ரெண்டும் இங்கதான் வந்து சேருமாம், அதுக்கு பொறவுதான் அவ சாமியார்மடம் போயி வண்டி ஏறுவாளாம், இந்தாளு வடசேரி முக்கம் வந்து வண்டி ஏற்றதாம்.

நாழி ஆயிட்டே இருக்கு., வெரசா சோலிய முடிச்சுபுட்டு, கடசி வண்டி புடிச்சு ஊருக்கு போயிரனும். இல்லாட்டி கால்நடையா காட்டாத்து பாலத்த தாண்டி நாலு மைலு எப்புடி போறது?

மழயோட இப்ப காத்தும் கைக்கோர்த்துக்கிடிச்சு... உங்கமழ எங்கமழ இல்ல.. கொள்ள மழ... பண்ட ஒரு வருஷம் காத்தடிச்சு அய்யனாரு கோயிலு ஆலமரம் விழுந்திருச்சு, அந்த வருஷ மழமாரியே இருக்கு இன்னக்கு. இதுக "வரட்டும் வரட்டும்"னு கருவிகிட்டு நிக்குறேன்.

சத்த இருங்க.. ரெண்டு உருவம் வர்றமாதிரி இருக்கு. பத்து தப்படிதான் ரோட்டுக்கும், கொட்டகைக்கும்னாலும் சரிவர யாருன்னு வெளங்கல... நா அப்புடியே பின்னாடிபோயி மறையவும் ரெண்டு உருவமும் கொட்டகைக்குள்ள வந்திடிச்சு...

ம்ம்ம்ம்.... அதுகதான்...

இந்தாளு சட்டபையிலேர்ந்து அவ கைக்கு ஏதோ எடம் மாறுது. கருமாதி காசு பணமாத்தான் இருக்கும். சோலி முடிஞ்சா கூலி குடுத்துத்தானே ஆவணும். அவ மாருக்குள்ள அத பத்திரபடுத்திகிட்டு இருக்கா... இதுக்கு பொறவும் நா நாழிய கழிக்க கூடாது....

அதுங்க அசர்றதுக்கு முன்னாடியே அதுக முன்னாடி கையில கத்தியோட நின்னதும் ரெண்டும் தெகச்சு போயிருச்சு... என்னைய இந்த கோலத்துல எதிர்பாத்து இருக்காதுங்களா.

என் மொதக்குறி அந்த அழவுராணிதான்.... ஆறடுக்கு குருது கணக்கா இருந்திகிட்டு, இந்தாளு பார்வை பட்டாதான் ஒனக்கு கீழுடம்பு பிசிபிசுக்குமோ? அந்தாளுக்கே குடிச்சு குடிச்சு நெஞ்செலும்பு தேஞ்சு போய் கெடக்கு... ஆளும் மூஞ்சியும் மொகரையும் பாரு..

நா எதுவும் பேசாமலே அவளுக்கு வெடவெடன்னு நடுங்குது, வெள்ளாங்கை பக்கமா இருந்த மஞ்சபைய விட்டுட்டா... குந்தாணி நகந்து அந்தாளு தோளுக்கு பின்னாடி மறஞ்சவ என்ன பண்ணிட்டா பாருங்க.. தளவாசகாரின்னா தலைய குடுத்தாவது இந்தாளுக்காவ போராடியிருப்பா... அவ கொள்ளவாச கொலகாரியில்ல... இந்தால என் பக்கமா புடிச்சு தள்ளிட்டு ஓடிட்டா...

கப்பிகல்லு ஒழுங்கையில போற சப்பரம் கணக்கா ஒழுங்கு இல்லாம ஓடிட்டா... என் மொதக்குறி தப்பிடுச்சு... இந்தாளு எழுந்து தள்ளாடி தள்ளாடி வேட்டியா கட்டையிலதான் புரியுது ஏரிக்கர ஊறல் பானய மூக்குமுட்ட ரொப்பி இருக்குறது..

அட்ரா சக்கை..

அந்த நாடியம்மாவோட சக்தியே எனக்குள்ள வந்து பூந்த மாதிரி இருக்கு... "ஹா... ஹா..."ன்னு சிரிச்சுகிட்டு, நாக்க துருத்திகிட்டு கத்தியோட முன்னேறவும், அந்தாளு மரண பயத்தோட மருவுறாரு..

"நா நடக்குற தொனிய பாத்தா முசிறி முப்பத்தி ரெண்டு கிராமமும் பொம்புள போலிஸ்னு பட்டம் வெச்சிருக்குதுக. ஆனா நா உனக்கு முன்னாடி அடங்கி போற போட்டையாதன இருந்தேன்" ஓங்கி குத்துன மொதக்குத்து இந்தாளு மாருக்கும், வயித்துக்கும் எடையில விழுந்திருச்சு... சுதாரிச்சு கத்திய லாவகமா நா உருவிபிட்டேன்...

"வாங்குன கடனுக்கு அந்த செருக்கி மவன் நா ஒனக்கு பெத்தமவள முந்தி விரிக்க சொல்ல, பொத்தி பொத்தி வச்ச ஒத்த புள்ளையும் பால்டாயிளையும் குடிச்சுபுட்டு ஆதியன்கொள்ள கெணத்தோட உசிர முடிச்சிகிடுச்சு. ஒனக்கு சொவுசு கேட்குதுல்ல"

பின்னாலேயே போன இந்தாளு தடுக்கி ஒசரப்பன விழுந்தாப்புல விழ "ஓனக்கு பொங்கி போடத்தான் எங்களுக்கு முடிஞ்சுது, நீ அவுசாரித்தனம் பண்ண எங்க உசுரு அனாமத்தா போவனுமா?" குத்த தோது பாத்துகிட்டேன்.

"கையாலாகதவனுக்கு எதுக்கு உசிரு?" ஓலக்க இடிக்கிறாப்புல, அந்தாளு பக்கவாட்டுல ஒக்காந்து மொத்தம் இருபத்தியொரு குத்து...

நா கக்குன கோவமெல்லாம் ரெத்தமா மழத்தண்ணியோட சேந்து ஓடுது, என்கோவம் அடங்க அடங்க, குத்துன வேகம் அடங்கி தெவ தெளிய சத்த நாழி ஆச்சு...

"பத்து மாசம் பெத்தெடுக்கிறது மட்டும்தான் ஆம்புளக்கும் ,பொம்பளக்குமுள்ள வேத்தும... மத்தபடி கோவமும், வீரமும் எங்களுக்குள்ளயும் அடங்கி கெடக்கு"ன்னு எழுந்து கத்திய வீசிப்புட்டு வடசேரி முக்கத்து பக்கமா நடக்குறேன்.

கொழும்பு ஸ்டோர் பக்கமா ரெண்டு மூணு தல எனக்கு எதித்த மாதிரி வர்றாப்புல இருக்கு, முந்தானைய தூக்கி முக்காடு போட்டுக்கிட்டு என் நடைய கட்டுறேன். மாவராசன்வீட்டு மழ இன்னும் ஓயல..ஆணா பொண்ணானுக்கூட அடையாளம் தெரிஞ்சிருக்காது.

தேரடித்தேறு கடையெல்லாம் அடைச்சுக் கெடக்கு, பூக்கட சந்து பக்கமா மட்டும் அஞ்சாறு சலசலப்பு தெரியுது... நா அதையும் தாண்டி, பத்தர் கடையெல்லாம் தாண்டி போனதும் பாத்தா, வடசேரி முக்கத்துலேர்ந்து அவுளுபொறி கடை வரைக்கும் வண்டியெல்லாம் அப்புடியே ரோட்ட ரொப்பிக்கிட்டு நிக்குது.

நடுவுல நாலாம் நம்பர் வண்டி நிக்குறமாதிரி தெரியுது. விறுவிறுன்னு போயி அதுல ஏறி பின்னாடி கதவு ஓரமா ஒக்காந்ததும் கண்ணாடிக்காரன் வந்து "என்னாயி முழுக்க நனைஞ்சிட்ட போல"ங்கிறான். நா எதுவும் பேசல. முந்தானையில இருக்குற அஞ்சு ரூவா காச எடுத்துக் குடுக்கவும், சீட்டையும் சில்லரையும் குடுத்துட்டுப் போறான்.


சன்ன கதவு ஓரமா தலசாச்சு ஒக்காந்திருக்கேன். சாரக்காத்து சங்கடமா தெரியல, வாக்கப்பட்டு வந்ததுலேர்ந்து இப்ப வக்கத்தவலா நிக்குரவரைக்கும் நெஞ்சுக்குள்ள ஓடுது. அதுல முச்சூடும் அழுகாச்சி பொம்மையாதான் நா இருக்கேன். இந்த வளரோட தேஞ்சுபோன வாழ்கையில பொத்தல் பொத்தலா எத்தன அவமானம்? எத்தன அலங்கோலம்? எத்தன அசிங்கம்? எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒத்த உசுரு, அதுக்குள்ளே ஒளிஞ்சிகிட்டு இருந்த வக்கிரம்! அயோக்கியத்தனம்!! கையாலாகத்தனம்!! சின்னாபின்னமா செதஞ்ச என் நெலம விரோதிக்குகூட வந்திடக்கூடாதுன்னு நெனச்சுகிட்டே மூக்க சிந்திக்கிறேன் முந்தானையில....

திடீர்னு பொடனில அடிச்சாமாறி தூரமா ஒரு சத்தம் கேக்குது. அந்த சத்தம் என்னைய கீழ எறங்க சொல்றமாரியே இருக்கு, இந்த சத்தத்த இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவ தஞ்சாவூரு போனபோது கேட்டிருக்கேன். இங்க கேக்குறது இதுதான் மொத தடவ.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, என்னால ஒக்கார முடியல, கிறுகிறுங்குது, எறங்குறியா இல்லையான்னு அதட்டுற மாரி இருக்கு. நாலாம் நம்பரும் இப்போதைக்கி நகறாப்புல தெரியல.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது... எதிராளிய பாத்தா நெருப்புகோழிகனக்கா கண்ணா மூடிக்கிறேன், காத பொத்திக்கிறேன். அப்பவும் அந்த சத்தம் எனக்குள்ள ஓடவும், "ஒ"ன்னு கத்துறேன். வண்டியில இருந்த நாலஞ்சு தலையும், கண்ணாடியும் திரும்பி என்ன பாக்குதுங்க.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, என்னைய அந்த சத்தம் இழுத்து கீழ விடுது. நாலாம் நம்பர விட்டு எறங்கி ஓடுறேன். சனம் "என்னமோ ஏதோன்னு" பதறுதுக. பின்னால கொஞ்ச சனம் ஓடியாருது. நா கண்ணு முன்னு தெரியாம ஓடினதுல ஒலையில வழுக்கி விழுந்துட்டேன். இளவட்டம் ஒன்னு என்ன தூக்கி விடுது.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, வெடவெடக்குது எனக்கு. எட்டிப் பாக்குறேன். மொத்த வண்டியலும் கட்டிபோட்ட கணக்கா நிக்குறதுக்கு காரணம் பள்ளத்துல மாட்டிக்கிட்டுருக்குற ஒரு லாரின்னு புரியுது. எப்படியாவது லாரிய சீக்கிரம் நகத்த சொல்லி மொரட்டுத்தனமா கத்துறேன். சனம் மொத்தமும் அங்கயும் இங்கயும் ஓடுதுக. அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, நான் காட்டுக்கத்து கத்துறேன், ரெண்டு பொமுனாட்டிக என்ன புடிச்சு ஆசுவாசப்படுத்துதுக, தலைவிரிகோலமா நா அலர்ற சத்தத்தில அந்த எடமே அல்லோலப்படுது. பாலு மில்லு கதவ ஒடச்சு, லாரி பின்னால வரவெச்சு, சோத்துகை பக்கமா ஒடிச்சு நேரா போக வெக்குது சனம்,

அந்த தூரத்து சத்தம் இன்னம் கிட்ட வருது, நா மறுபடி அலற, நாலாம் நம்பரையும் சேத்து அங்க நின்ன எல்லா வண்டியலும் அவசரகதியா நவவந்திடுச்சு. சத்த நாழியில அந்த எடமே காலியாவ, நான் ஒத்தையா நின்னுகிட்டு இருக்கேன்.

அந்த தூரத்து சத்தம் இன்னம் கொஞ்சம் கொஞ்சமா கிட்ட வந்து என்னைய தாண்டி போவுது. என்னெமோ தெரியல அந்த சத்தம் போட்டுக்கிட்டு வந்த வண்டியோட பின்னாடி பக்கம் குறுக்குலயும், நெடுக்குலயும் போட்டிருந்த செவப்பு குறிய பாத்ததும் என் கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப் பாக்குது... மழ "சோ"ன்னு பேஞ்ச்சுகிட்டு இருக்கு...

No comments: